
வீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. அதே மாதிரி எத்தனை படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து படம் எடுப்பது அவரது தன்னம்பிக்கை. அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல் கிண்டல் படம் எடுத்தார். இந்த வரிசையில் இப்போது அவர் எடுக்கப்போகும் படத்தின் பெயர் அதிரடி.
ரோட்டில் வித்தை காட்டி பிழைக்கும் ஒருவனுக்கு வரும் காதலும், அவனது வாழ்க்கையும்தான் கதையாம். இன்று (ஜனவரி 5) காலை ஆர்கேவி ஸ்டூடியோவில் 50 முட்டைகளை விழுங்கி, வயிற்றில் பாறாங்கல்லை உடைத்து, தனது குழந்தைகளுடன் பாட்டுபாடி என பல அதிரடி வேலைகளை செய்து படத்தை துவக்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிரண்டு ஓடாத குறையாக இருந்தது அவரது அதிரடிகள்.
கதை, திரைக்கதை வசனம், இயக்கம், இசை, ஹீரோ எல்லாமே அவர்தான். ஒளிப்பதிவை மட்டும் க.முத்துகுமார் கவனிக்கிறார். சென்னை மற்றும் கூவம் ஆற்று கரையில் ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.