பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததின் எதிரொலியாக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வெறும் 44 இடங்களை மட்டுமே அந்தக் கட்சி பெற முடிந்தது. நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதுவும் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகனும் துணைத்தலைவருமான ராகுல் காந்தியும் வென்ற ரேபரேலி, அமேதி தொகுதிகள்தான். கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 22 இடங்கள் கிடைத்தது.
தற்போதைய தோல்வியில் இருந்து மீண்டு, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த ஏற்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இதற்கான அதிகாரத்தை கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி, கட்சியின் காரியக்கமிட்டி சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நினைவுகூரத்தக்கது.இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்காக வசதியாக அங்கு கட்சியை கூண்டோடு கலைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன திவிவேதி வெளியிட்டார். உத்தரபிரதேசத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார கமிட்டிகள் அனைத்தும் கலைக்கப்பட்டு விட்டன. அதே நேரத்தில் கட்சியின் மாநிலத்தலைவர் பதவியில் நிர்மல் காத்ரி தொடர்வார் என்று ஜனார்த்தன திவிவேதி கூறினார்.

Post a Comment